“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்த இடமளியோம்” – மஹிந்த அணி திட்டவட்டம்!
“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற சானக மாதுகொட தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“போரில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எமக்கு கவலை உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம்.
ஆனால் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் தமிழ் ஈழப் படத்துடன், கொடியுடன், பாடல்களையும் ஒளிபரப்பிக்கொண்டுதான் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.
முப்படையினர் தமது உயிரை தியாகம் செய்து பாதுகாத்த நாட்டில் இவ்வாறு நினைவேந்தலை நடத்த அனுமதிக்க கூடாது.
இந்நாடாளுமன்றத்துக்கு வடக்கில் இருந்த வந்த சில தமிழ் எம்.பிக்கள் இனவாதம் கதைக்கின்றனர். இனவாதம் பேசிதான் அவர்கள் நாடாளுமன்றம் தெரிவானார்கள்.
போர் வெற்றி நாளை, இனப்படுகொலை தினமாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒற்றையாட்சி அரசமைப்பின்கீழ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
எனவே, இனப்படுகொலை தினத்தை பிரேரிப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதா? இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அப்படியான நாளை ஒதுக்குவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்றார்.





