காசா நோக்கிச் சென்ற உதவிப் படகுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் – பல நாடுகள் கண்டனம்
காசாவை நோக்கிச் சென்ற உதவிப் படகுக் குழுவில் இருந்த 41 படகுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 10 படகுகள் இன்னும் காசாவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பின் தகவலின்படி, அந்தப் படகுகள் காசாவிலிருந்து சுமார் 121 கடல் மைல்கள் தொலைவில் இருந்தன. காசா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் கடந்த வாரம் துருக்கியின் மர்மாரிஸ் துறைமுகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகள் புறப்பட்டிருந்தன.
சைப்ரஸ் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் திங்கட்கிழமை படகுகளை இடைமறித்து, சில ஆர்வலர்களைக் கைது செய்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக துருக்கி, ஸ்பெயின், ஜோர்டான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டம் மற்றும் மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து செய்தியளித்த அல் ஜசீரா நிருபர் தாரிக் அபு அஸ்ஸூம், சமீப ஆண்டுகளில் காசாவை நோக்கிச் சென்ற கப்பல் குழுவுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய கடற்படை இடைமறிப்புகளில் இதுவும் ஒன்றாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்ததாக கூறினார்.
இந்நிலையில், படகுக் குழு தனது பயணத்தை கைவிடுமாறு இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் முன்பே எச்சரித்திருந்தது.




