மேல் மாகாண ஆளுநர் பதவி விலக தீர்மானம்
மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இன்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக பணியாற்றுவதற்கான கூடுதல் பொறுப்புகள் மற்றும் தமது குடும்ப கடமைகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் உள்ள அதிகரித்து வரும் சவால்களைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் வரையில் தாம் ஆளுநராக கடமையாற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் வகையிலும், தமது சர்வதேசத் தொடர்புகள் மற்றும் வலையமைப்புகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கவும், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக தற்போதைய தன்னார்வ பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஹனீஃப் யூசுப் தெரிவித்துள்ளார்.





