லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு – 11 பேர் தடைப்பட்டியலில்!
மத்திய லண்டனில் டாமி ராபின்சன் ( Tommy Robinson) தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக வெளிநாடுகளில் உள்ள 11 “தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள்” நாட்டிற்குள் நுழைவதை இங்கிலாந்து அரசாங்கம் தடை செய்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதித்துள்ளதுடன், அத்தகைய நபர்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாகவும் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்டதாகக் கூறும் நபர்களில் போலந்து அரசியல்வாதி டொமினிக் டார்சின்ஸ்கி (Dominik Tarczynski), பெல்ஜிய அரசியல்வாதி பிலிப் டிவின்டர் ( Filip Dewinter), இஸ்லாமிய எதிர்ப்பு செல்வாக்கு செலுத்துபவர் வாலண்டினா கோம்ஸ் ( Valentina Gomez), அமெரிக்க வர்ணனையாளர் ஜோயி மன்னாரினோ ( Joey Mannarino) மற்றும் டச்சு குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் ஈவா விளார்டிங்கர்ப்ரோக் ( Eva Vlaardingerbroek) ஆகியோர் அடங்குவர்.
தனது அரசாங்கம் அமைதியான போராட்டங்களை ஆதரிக்கும் என்றும், ஆனால் வெறுப்புணர்ச்சிக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் ஸ்டாமர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.





