நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல்: அவசர விவாதம் கோருகிறது எதிரணி!
நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட இந்தப் பிரேரணையை, எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக தலைமையில் சென்ற குழுவில், பிரதி முதற்கோலாசான்களான ஜே.சி.அலவதுவல, அஜித் பி. பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அண்மைக்காலமாக நீதித்துறையின் செயற்பாடுகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் வெளியிடப்படும் கருத்துக்கள், நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த விவகாரம் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களைப் பாதிக்கும் என்பதால், இது குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று இந்தப் பிரேரணை ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.





