ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சி உறுதி
ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் தாம் இன்னும் உறுதியாக உள்ளதாக ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சி தலைவர் அனாஸ் சர்வர் (Anas Sarwar) தெரிவித்துள்ளார்.
பெப்ரவரியில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டார்மர் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
தற்போது அதிலிருந்து தாம் “ஒரு கணமும் பின்வாங்கவில்லை” என அவர் கூறியுள்ளார்.
மே 07ஆம் திகதி நடைபெறவுள்ள ஹோலிரூட் தேர்தலை முன்னிட்டு, ஸ்டார்மரிடமிருந்து அரசியல் ரீதியாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக இந்தக் கருத்து பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
“இந்தத் தேர்தலில் எனக்கும் ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சிக்கும் அளிக்கப்படும் வாக்குகள் ஸ்டார்மருக்கு ஆதரவாக கருதப்படாது.
இது ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்,” என்று சர்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் இந்த நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள காரணமாக இருந்தது பீட்டர் மண்டேல்சன் தொடர்பான சர்ச்சை என அவர் கூறினார்.
“அந்த விவகாரம் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவர் ஒருபோதும் தூதராக நியமிக்கப்படக்கூடாது. நான் நம்புவதாவது, அவர் நாட்டிற்கு துரோகி,” என சர்வர் கடுமையாக விமர்சித்தார்.





