60 நாள் கெடுவை முடக்கிய தற்காலிக போர் நிறுத்தம்!
“ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தமானது, போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது.”
இவ்வாறு அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் விளக்கமளித்துள்ளார்.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா ஆரம்பித்தது.
போர் தொடுப்பதற்குரிய கட்டளையை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அது தொடர்பில் 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.
இதற்கமைய கடந்த மார்ச் 2 ஆம் திகதி இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ட்ரம்ப் தெரியப்படுத்தி இருந்தார்.
அமெரிக்காவின் போர் அதிகார சட்டப்படி, போர் நடவடிக்கைக்கு, 60 நாட்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்காவிட்டால், அதன்பின் போர் நடவடிக்கையை அதிபர் திரும்ப பெற வேண்டும்.
இந்த 60-வது நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது.
இதனால் சட்டப்படி போரின் 60-வது நாளான மே 1-ஆம் திகதி ஈரானுடனான போருக்கு டிரம்ப் நிர்வாகம் நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோருமா என்று ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் டிம் கெய்ன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத்,
‘‘ஈரானுடனான போர்நிறுத்தம், போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது’’ என்றார்.
இந்த காலக்கெடு முடிவடைவது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனிடம் வினவியபோது,
“அமெரிக்கா போர் நிறுத்தத்தில் உள்ளது. ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படவில்லை. ஈரானுடன் அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா முயன்று வருகிறது’’ என்றார்.





