சமஷ்டி கட்டமைப்பிலான புதிய அரசமைப்பு வேண்டும்: தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய உழைப்பாளிகள் தினப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதாரம் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரகடனத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:-
சம்பள உயர்வு: பொருளாதாரச் சிக்கல், ‘டித்வா’ புயல் மற்றும் மேற்காசிய போர்ச் சூழலால் வீழ்ச்சியடைந்துள்ள ரூபாவின் பெறுமதியைக் கருத்திற்கொண்டு, நாளாந்தச் சம்பளம் பெறுவோரின் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்.
சுயதொழிலாளர் நிவாரணம்: உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் சுயதொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
மின்சாரக் கட்டணம்: நிலக்கரி இறக்குமதி ஊழலால் ஏற்படும் மின்சாரக் கட்டண உயர்வை மக்களிடம் வசூலிக்காமல், அதற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே அந்தப் பணத்தைப் பெற வேண்டும்.
அரசியல் தீர்வு: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பிலான புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
தேர்தல்: நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும்.
கைதிகள் விடுதலை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதுடன், எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிப் பொறிமுறை உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
நில விடுவிப்பு: வடக்கு, கிழக்கில் இராணுவம் மற்றும் தொல்பொருள், வனப்பாதுகாப்பு, மகாவலி ஆகிய திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
மேலும், புதிய அரசிலும் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு பொதுச்சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது பிரகடனத்தில் வலியுறுத்தியுள்ளது.





