2ஆவது இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி!
IPL 2026 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது.
லக்னோவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (22) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (8) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.
முகமது ஷமி, மொஹ்சின் கான் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ராஜஸ்தானை நிலைகுலையச் செய்தனர்.
எனினும், ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடி 29 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றது.
160 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று, தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தனது துல்லியமான பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.





