இலங்கை செய்தி

7 ஆண்டுகள் கடந்தும் நீதி எங்கே? மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது.

இன்று காலை 9.05 மணியளவில் சீயோன் தேவாலய முன்றலில் நினைவேந்தல் ஆரம்பமானது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கண்ணீர் மல்க, மலர் அஞ்சலி செலுத்தி, சுடரேற்றி குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் முன்னாள் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அதேவேளை, கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சர்வ மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர்.

சீயோன் தேவாலயத் தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் தமது இன்னுயிர்களை இழந்தனர்.

80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், ஒரு சிறுமி தனது கண்பார்வையை முழுமையாக இழந்ததுடன், இருவர் இன்றும் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுக்கையில் இருந்து வருகின்றனர்.

ஒரு தந்தை தனது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் பறிகொடுத்துவிட்டு இன்றும் நீதிக்காக ஏங்கி நிற்பது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

நினைவேந்தல் நிகழ்வுகளின் நிறைவில், “எமக்கான நீதி எங்கே?” என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 ஆண்டுகள் கடந்தும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் கண்டறியப்படாமை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான முறையான நீதி இன்னும் எட்டப்படாமை குறித்தும் இதன்போது கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!