சொந்த கண்ணிவெடியைத் தேடும் ஈரான்: உலகிற்குப் புதிய ஆபத்து!
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதில் ஈரானுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலின் போது, ஈரான் தனது கடல் எல்லையான ஹார்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளைப் (Sea Mines) பதித்தது. ஆனால், அவை எங்கு வைக்கப்பட்டன என்ற துல்லியமான ஆவணங்களை ஈரான் சரியாகப் பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஈரான் தனது சிறிய படகுகள் மூலம் மிகக் குறுகிய காலத்தில் “தாறுமாறாக” (Haphazardly) இந்தக் கண்ணிவெடிகளை வீசியுள்ளன. இதனால் அவற்றின் இருப்பிடத்தை ஈரானால் இப்போது கண்டறிய முடியவில்லை.
தற்போது கடல் நீரோட்டத்தின் காரணமாகவும், அலையின் வேகத்தினாலும் பல கண்ணிவெடிகள் அவை வைக்கப்பட்ட இடத்திலிருந்து பல மைல்கள் நகர்ந்து சென்றுவிட்டன. இதனால் இப்போது ஈரானியக் கப்பல்களுக்கே அந்தப் பகுதி மரணக் குழியாக மாறியுள்ளதக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். ஆனால், கண்ணிவெடிகள் எங்கே இருக்கின்றன என்று தெரியாததால், ஈரானால் இந்தப் பாதையைப் பாதுகாப்பான பாதையாக அறிவிக்க முடியவில்லை.
இவ்வாறு நிலைமை மோசமானதால், ஈரான் தனது புரட்சிகர காவல் படை (IRGC) மூலம் சில “மாற்றுப் பாதைகளை” (Alternative Routes) அறிவித்துள்ளது. இருப்பினும், அந்தப் பாதைகளும் முழுமையாகப் பாதுகாப்பானவை என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 25% இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. குறிப்பாக இந்தியாவிற்குத் தேவையான 80% எரிசக்தி இறக்குமதி இந்தப் பாதையைச் சார்ந்து இருப்பதால், இந்த “கண்ணிவெடி விவகாரம்” உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில், இந்தத் தொழில்நுட்பச் சிக்கல் ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று கூறப்படுகிறது





