திரிணமூல் அரசின் ஊழல்கள் தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்
திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய, பாஜக வெள்ளை அறிக்கையை கொண்டுவரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
மேற்கு வங்க மாநிலம் பூர்ப பர்தமானில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வெளியிடப்படும் அறிக்கை திரிணமூல் அரசாங்கத்தின் 15 ஆண்டுகால முழு விபரத்தையும் முன்வைக்கும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஒவ்வொரு குற்றத்தையும் தடுக்க பாஜக ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எங்கெல்லாம் அதிக வாக்குப்பதிவும், பெண்களின் அதிகமான வாக்குகளும் பதிவாகிறதோ, அங்கெல்லாம் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய மக்கள் ஆணை கிடைத்துள்ளது.
கேரளாவில், எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூட உரிமை கோராத ஒரு சூழல் நிலவுகிறது. மேற்கு வங்கத்திலும், பாஜக வெற்றியை நோக்கித் தொடர்ந்து முன்னேறி வருகிறது. உங்கள் உற்சாகமும், செயல்பாடுகளுமே அந்த வெற்றியை உறுதி செய்கின்றன
பாஜகவுக்கு மேற்கு வங்கத்தில் பெருகிவரும் ஆதரவைக் கண்டு, திரிணமூல் காங்கிரஸ் பீதியடைந்துள்ளது, இதனால் பொய்களைக் கூறி மக்களைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது.
திரிணமூல் காங்கிரஸின் ஊழல் கடையை பாஜக மூடிவிடும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். மேற்கு வங்கத்தின் அனைத்து சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் ஒரு உறுதிமொழியை அளிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். மேற்கு வங்கத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் 3,000 ரூபா நிதியுதவி அளிக்கப்படும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், தற்போதைய நலத்திட்டங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தவறான தகவல்களைப் பரப்புகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், பாஜக எதையும் நிறுத்தாது. திரிணமூலின் ஊழல் எனும் கடையை மட்டுமே பாஜக மூடும், திரிணமூல் காங்கிரஸின் கொள்ளையை மட்டுமே பாஜக தடுத்து நிறுத்தும்” என்று அவர் கூறினார்.





