ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் 1,400 பேரின் கதையை முடித்துவிட்டோம்: மார்தட்டுகிறது இஸ்ரேல்!
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு மேற்படி தகவலை இன்று (10) வெளியிட்டுள்ளது.
தெற்கு லெபனானில் முன்னெடுக்கப்பட்ட தீவிர ராணுவ நடவடிக்கையின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயிரக்கணக்கான தளங்கள் அழிக்கப்பட்டன எனவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பல நாடுகள் முயற்சித்துவரும் சூழ்நிலையில், லெபனான்மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல் அமைதி முயற்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனானையும் உள்வாங்குமாறும், அந்நாடுமீதான தாக்குதலை நிறுத்துமாறும் பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
எனினும், போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது எனக் கூறி கடும் தாக்குதலை நடத்திவருகின்றது இஸ்ரேல்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டாலும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், சிறார்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனானில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துவருவதால் அங்கு பேரிழப்பு ஏற்பட்டுவருகின்றது.





