விவசாயத்துறைக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்!
“உலகில் எந்தவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படாதிருப்பதற்கு எமது விவசாயிகளின் உன்னதமான அர்ப்பணிப்பே காரணமாகும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது.
அதன்பின்னர் மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையின் மீது கட்டியெழுப்பப்பட்ட இந்நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையை இதைவிட உயரிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடம் பாரிய திட்டம் இருக்கின்றது.
எந்தவொரு நாட்டிற்கும் தனக்கே உரித்தான ஒரு பயணப்பாதை இருக்கின்றது என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எமக்கே உரிய கலாசாரமும் பயணப்பாதையும் விவசாயத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது எனவும் குறப்பிட்டார்.
விவசாயத்துடன் பிணைந்துள்ள அந்த உன்னதமான கலாசார விழுமியத்தை இந்த புத்தரிசி விழா பிரதிபலிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். புதிய இளம் தலைமுறையினர் புதிய கருவிகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விவசாயத் துறையில் நாம் உழைப்பு ரீதியான பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். எனவே, விவசாயத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டியுள்ளது.
உலகம் முழுவதும் நிலத்தை தயார் செய்தல், விதைத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவில் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளன.
எனவே, மிக வேகமாக எமது விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் எம்மால் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்.” – என ஜனாதிபதி மேலும் கூறினார்.






