2025 இல் வடக்கில் 1000 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிப்பு!
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் (07) நாடாளுமன்றத்தில் கூடியது.
இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போதும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போதும் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டறிந்தார்.
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைத்தல், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.
2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனைய காணிகளையும் முறையாக விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்புப் படையினரின் நலன்புரி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன்,பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள விதிமுறைகளுக்கு ஆலோசனைக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டது.







