ஈரான் மக்களுக்காக நடத்தப்பட்ட ஏலம்: 1 முட்டை 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை!
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் முட்டையொன்று இந்திய நாணய பெறுமதியின் 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்திலேயே குறித்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது.
அஞ்சுமன் இமாமியா லே மற்றும் மஜ்லிஸ்-ஏ-உலமா லே உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகள் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றன.
இதற்கமைய நடைபெற்ற ஒரு ஏலத்தில் முட்டையொன்று 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையானது.
அந்த முட்டையை ஏலத்தில் வாங்கிய ஷபீர் உசேன், அது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு,
“ முட்டையொன்றின் விலை 10 ரூபா (இந்திய நாணய மதிப்பில்) என்பது அனைவருக்கும் தெரியும்.
என்னிடம் பணம் உள்ளது என்பதால் நான் 25 ஆயிரம் ரூபா கொடுத்து வாங்கவில்லை.
ஈரானில் குழந்தைகள் எவ்வளவு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்ற செய்தியை இது உலகுக்குச் சொல்கிறது.
அவர்களுக்காகவே நான் இந்தத் தொகையை வழங்கினேன். நாங்கள் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.” – என்று குறிப்பிட்டார்.
ஈரான் மக்களுக்காக ஜம்மு காஷ்மீர் மக்களும் பணம் மட்டுமல்லாமல் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கால்நடைகள் மற்றும் பாரம்பரிய செப்புப் பாத்திரங்களையும் நன்கொடையாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





