25 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 12 பேருக்கு மறியல் நீடிப்பு!
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மேலும் 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சமயம், கடற்படையினரால் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அன்று முதல் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று மல்லாகம் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி மீனவர்களுக்கு எதிராக இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை எனத் திணைக்களம் சார்பில் மன்றுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 25 மீனவர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, மேற்படி 12 மீனவர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், கைது செய்யப்படும் மீனவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இரு வேறு நீதிமன்றங்களில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





