செக் குடியரசில் இஸ்ரேலிய ஆயுதத் தொழிற்சாலை தீக்கிரையாக்கம்
செக் குடியரசில், இஸ்ரேலிய ஆயுத நிறுவனம் எல்பிட் முறைமை (Elbit Systems) தொடர்புடைய ஒரு தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இரகசியக் குழுவொன்றே தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தொழிற்சாலை, செக் நிறுவனம் மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸின் இணைந்த நடவடிக்கைகளில் பல கட்டிடங்களை கொண்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் நடந்த தாக்குதலில் சில கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
எல்பிட் முறைமை, காசா மற்றும் ஈரான் உட்பட இஸ்ரேலிய இராணுவம் நடத்தும் போர்களில் பயன்படுத்தப்படும்
தரை மற்றும் வான்வழி ஆயுதங்களின் முக்கிய விநியோகஸ்தராக தன்னை விளக்குகிறது.
‘தி எர்த் குவேக் ஃபேக்ஷன்’ (The Earthquake Faction) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழு, இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தியதாக டெலிகிராமில் அறிவித்துள்ளது.
அந்த குழு மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இந்தத் தளம், இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரின் ஐரோப்பிய நடவடிக்கைகளுக்கு மையமானது. இப்போது அது தீப்பிடித்து எரிகிறது.”
“நாங்கள் தீமையின் நாற்றத்தால் சூழப்பட்டு, அந்த மிருகத்தின் வயிற்றில் இருக்கிறோம். கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள சர்வதேச அரசாங்கங்களிடம் கெஞ்சுவதற்கு நேரமில்லை… அவர்கள் கொலை செய்யும் வழிமுறைகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்,” என்றும் தெரிவித்துள்ளது.
செக் காவல்துறை, “ஒரு சாத்தியமான பயங்கரவாதத் தொடர்பு” இருக்கலாம் எனக் குறிப்பிட்டு, விசாரணை நடத்தி வருவதாக X தளத்தில் தெரிவித்துள்ளது.




