இராஜதந்திர தீர்வை வலியுறுத்துகிறது இந்தியா!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கு பேச்சு மற்றும் இராஜதந்திர வழியில் சிறந்த தீர்வை காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
“ மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் நிலைமைகளை பிரதமர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்.
சரியான விதத்தில் பதிலளிக்க ஏதுவாக அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த தொடர்ச்சியான மோதல் இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
நாம் ஓர் அண்டை நாடு. மேற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மை நீடிப்பதில் நமக்கு வெளிப்படையான பங்கு இருக்கிறது.” எனவும் அவர் கூறினார்.
வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். ஈரானிலும் படிப்பு மற்றும் வேலை தொடர்பாக சில ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
இந்தப் பகுதி நமது எரிசக்திப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் பல நிறுவனங்கள் இங்கு உள்ளன. விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதற்கான
வாய்ப்புகளும், ஸ்திரத்தன்மை இல்லாத சூழலும் மிகவும் முக்கியப் பிரச்சினைகள்.
இந்த மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது.” – எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.





