மகளை காணாமலேயே மரணமான தந்தை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!
வவுனியாவில் காணாமல் போன தனது மகளைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று (08) மரணமடைந்துள்ளார்.
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ஜெயவனிதாவின் கணவரான பெரியமடு நெடுங்கேணி பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை(66 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது மகளான கா.ஜெரோமி 2009 இல் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்ததார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரத்தில் தனது மகளின் புகைப்படம் ஜனாதிபதியுடன் வந்திருந்ததாக அவர்கள் தெரிவித்து வருவதுடன் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிலும் அது தொடர்பாக சாட்சியமளித்திருந்தனர்.

இதேவேளை அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 3307 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார்.
இந்நிலையில் மகளை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





