இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 45 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சாஹிப்சாதா ஃபர்ஹான் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
அவர் 45 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து ஆடிய பாபர் அசாம் 24 பந்துகளில் 25 ஓட்டங்களையும், அதிரடியாக ஆடிய ஃபக்கர் சாமான் 16 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
14 ஓவர்கள் முடிவில் 107/3 என்ற வலுவான நிலையில் பாகிஸ்தான் காணப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி 170 ஓட்டங்களை எளிதாகத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இறுதி ஓவர்களில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு பாகிஸ்தான் அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக ஜேமி ஓவர்டன், செட்டிலாகி ஆடிய ஃபர்ஹான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆதில் ரஷித், அதிரடி வீரர் ஃபக்கர் சாமானை வெளியேற்றினார்.





