ஓரணியில் திரண்டு பிரிட்டன் துணை பிரதமரை சந்தித்த தமிழ்த் தலைவர்கள்!
இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரிட்டன் எப்போதும் துணைநிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டனின் துணை பிரதமருக்கும், தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று (18) நடைபெற்றது.
இதன்போது நல்லிணக்கம், நீதி மற்றும் தமிழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது என கூறப்படுகின்றது.
அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், தமிழ் பிரதிநிதிகளின் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்யவும் பிரிட்டன் உறுதியாக இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தேசிய இனப் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரிட்டன் எப்போதும் துணைநிற்கும் என உறுதி அளிக்கப்பட்டது என தெரியவருகின்றது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எனினும், மேற்படி சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இரு தரப்பில் இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.





