படையினர்மீதான தடை குறித்து பிரிட்டன் துணை பிரதமருடன் பேசப்பட்டதா?
“ இலங்கை படையினர்மீதான தடைகள் பற்றி பிரிட்டன் துணை பிரதமருடன் பேச்சு நடத்தப்படவில்லை.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்றது.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது தடைகளை விதிப்பதில் முக்கிய பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லாமி முக்கிய பங்கு வகித்தார் என சிங்கள தேசியவாத அமைப்புன் குற்றஞ்சாட்டி இருந்தன.
இந்நிலையில் படையினர்மீதான தடைகள் பற்றி பேசப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்புவதற்கு முற்பட்டவேளை,
“அவை எதுவும் பற்றி பேசப்படவில்லை. நான் கூறிய விடயங்கள் பற்றியே பேசப்பட்டன.” என்றார் அமைச்சர் விஜித ஹேரத்.
பிரிட்டன் துணை பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர்,
“ நானும், ஜனாதிபதியும் பிரிட்டன் துணை பிரதமருடன் பேச்சு நடத்தினோம்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பிரிட்டன் வழங்கிய ஆதரவுக்கும், டித்வா புயலின்போது வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஆடை ஏற்றுமதி மற்றும் இதர ஏற்றுமதி தொடர்பிலும் பேசப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டன.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.” – என்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்.





