ஆயுத கடத்தல் குற்றச்சாட்டு – அமெரிக்க பிரஜைக்கு சிறை தண்டனை விதித்த ரஷ்யா!
மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்த முயன்றதாக கூறப்படும் அமெரிக்க பிரஜை ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கலாஷ்னிகோவ் (Kalashnikov) ஆயுதங்களை சேகரிப்பவரான அந்த நபர், மொஸ்கோவின் வுனுகோவோ (Vnukovo) விமான நிலையத்தில் இருந்து குறித்த ஆயுதத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
அடையாளம் வெளியிடப்படாத அந்த நபர், ஆயுதக் கடத்தல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவருக்கு 04 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் அமெரிக்க குடிமக்களை பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு நியாயமான சிகிச்சையை மறுப்பதாகவும், நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் அவர்களை தண்டிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும் குறித்த குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அதிகாரிகள் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





