சிட்னி கைது நடவடிக்கையை நியாயப்படுத்தும் பொலிஸார்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொதிப்பு!
இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog இன் ஆஸ்திரேலிய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
பொலிஸாரை தாக்க முற்பட்டனர் என இவர்களில் 10 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் சுமார் 6 ஆயிரம்பேர்வரை நேற்றிரவு திரண்டிருந்தனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்புக் கூட்டத்தில் உரைகள் முடிவடைந்த பின்னர், போராட்டக்காரர்கள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
பொலிஸ் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனினும் பொலிஸ் தடுப்புகளை உடைக்க போராட்டக்காரர்கள் முற்பட்டனர் எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்களை வன்முறை ரீதியில் பொலிஸார் ஒடுக்கினார்கள் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், பொலிஸாரின் நடவடிக்கையை NSW மாநில அரசு நியாயப்படுத்தியுள்ளது.
எனினும், பொலிஸார் அடக்குமுறையைக் கையாண்டனர் எனவும், அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.





