தமிழர்களின் தொல்லியல் இடங்கள் அழிக்கப்படும் – யாழ் நூலக எரிப்பின் தொடர்சியே கிவுல் ஓயா
கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தினால் தமிழர்களுடைய வரலாற்றைப் பறைசாற்றும் 47தொல்லியல் இடங்கள் அழிக்கப்படும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டடத்திற்கு எதிராக இன்று நெடுங்கேணியில் இடம்பெற்ற பேரணியில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
கடந்தகால அரசு யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்து எவ்வாறு தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழித்தார்களோ, அதேபோல தற்போதைய அரசு கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தி தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் 47தொல்லியல் இடங்களை அழிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மணலாறு என்பது தமிழர்களின் இதய பூமியாகும். அத்தகைய தமிழர்களின் இதயபூமியான மணலாற்றில் மகாவலி அதிகாரசபையினால் திட்டமிட்டவகையில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வெலிஓயா என பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது மகாவலி (எல்)வலயத்தின் கிவுல் ஓயாத் திட்டத்தினூடாக வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள தமிழர்களின் பூர்வீக கிராமங்கள்,வயல்நிலங்கள், களங்கள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டு இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக ஏற்கனவே குடியேற்றப்பட்ட 4372 பெரும்பான்மையினக் குடும்பங்களும், குடியேற்றப்படவுள்ள 1626 பெரும்பான்மையினக் குடும்பங்களுமாக மொத்தம் 6000 பெரும்பான்மையினக் குடும்பங்களே இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினூடாக பயனடையவுள்ளதாக கிவுல் ஓயாத் திட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித பயன்களுமில்லை. தமிழ்மக்களுடைய பூர்வீக மணலாற்றை ஆக்கிரமித்து குடியேற்றப்பட்டுள்ள மற்றும் குடியேற்றப்படவுள்ள பெரும்பான்மை இனத்தவர்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்துவதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்களை கடுமையாக எதிர்க்கின்றோம். அரசினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளை மிகமோசமான கீழ்த்தரமான செயற்பாடுகளாகவே காண்கின்றோம்.
எனவே எமது பூர்வீக நிலங்களைத் தக்கவைக்கவேண்டுமெனில் நாம் போராட வேண்டும்.
ஹம்பாந்தோட்டையிலோ மாத்தறையிலோ காணிகளை பெறுவதற்காக நாம் இங்கு போராட்டத்தை மேற்கொள்ளவில்லை. எமது தமிழர்களின் பூர்வீக தமிழர்தாயகத்தில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவே போராடுகின்றோம்.
இந்தக் கிவுல் ஓயாத் திட்டத்திற்காக பாரிய அளவில் அடர்வனங்களை அழிப்பதன்மூலம் எமக்கும் காட்டு யானைகளுக்கும் மோதல்களை உருவாக்கவும் முனைகின்றனர். இவ்வாறு காட்டுயானைகளுக்கும் எமக்கும் மோதல்களை ஏற்படுத்த முயலாதீர்கள். முடியுமானால் நீங்கள் வாருங்கள் மோதிப்பார்க்கலாம் ” என்றார்.





