பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இன்று (04) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மின்னல் மற்றும் இடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
திறந்த வெளியிலோ அல்லது மரங்களுக்கு அடியிலோ நிற்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான கட்டடம் அல்லது வாகனத்திற்குள் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.





