மாவீரர் துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்த சென்றவர்களை தாக்கிய இராணுவத்தினர்!
மணலாறு பகுதியில் உள்ள துயிலுமில்லம் ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணலாறு பகுதியில் உள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்ய சென்ற பொதுமக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினரும், அளம்பில் புலனாய்வு துறையினரும் இணைந்து மக்களை துப்பாக்கியால் தாக்கி அடித்து விரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
“ஜனாதிபதி கூறியுள்ளார் இறந்த உறவுகளை நினைவு கூறலாம் என்று, ஆனால் இப்படி கூறிவிட்டு மறைமுகமாக உங்கள் புலனாய்வு துறையினரையும், இராணுவத்தினரையும் அனுப்பி தாக்குவதா? அளம்பில் புலனாய்வு துறையினர் எம்மை விரட்டி இடையூறு செய்கிறார்கள். மணலாறு துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் படுத்திருக்கிறார்கள். நான்கு நாட்களாக நாம் துயிலுமில்லத்தினை துப்பரவு செய்கிறோம்.
ஜனாதிபதி சொல்வது ஒன்று ஆனால் இங்கு இராணுவத்தினரும், புலனாய்வு துறையினரும் செய்வது ஒன்று. இப்படி செய்வது என்றால் ஏன் இறந்தவர்களை நினைவு கூறலாம் என கூறினீர்கள்? இதற்கு எமக்கு ஒரு தீர்வு வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.





