ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அகதிகள் பகிர்வுத் திட்டம் – 30,000 பேரை பகிர நடவடிக்கை
இத்தாலி, கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகளின் தொடர்ச்சியான வருகையால் பெரிதும் திணறி வருகின்றன.
இந்த நாடுகளின் சுமையைக் குறைக்கும் நோக்குடன், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
அதன்படி, ஆரம்பக் கட்டமாக, குறைந்தது 30,000 தஞ்சம் கோருவோரை மற்ற ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள உள்ளன. இது, முன்னணி நாடுகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகும்.
இந்த நிலையில், ஐரோப்பாவிற்கெனத் தனித்துவமான புலனாய்வுச் சேவைப் பிரிவு ஒன்றை உருவாக்க ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சவால்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, உறுப்பு நாடுகளின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் ஒரு ஐரோப்பியப் புலனாய்வுத் துறை அவசியமென அவர் கருதுகிறார்.
எவ்வாறாயினும், வான் டெர் லேயனின் இந்த புலனாய்வுச் சேவைப் பிரிவு முன்மொழிவுக்கு பிரஸ்ஸல்ஸில் உள்ள பல தூதரக அதிகாரிகளிடையே ஒத்த கருத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





