கரூர் சம்பவம் – விஜய்க்கு கமல்ஹாசன் வழங்கிய அறிவுரை
கரூர் சம்பவத்தை பொறுத்தவரை விஜய் இனி ஒரு தலைவராக செய்யவேண்டியதை அவர் செய்ய வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி அறிவுரை வழங்கியுள்ளார்.
கரூரில் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மநீம தலைவர் கமல்ஹாசன் நேற்று கரூர் சென்றிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
“இந்த சம்பவத்தில் யாரையும் குற்றம் சுமத்த முடியாது. இதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. நீங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதால், சில விஷயங்கள் நீதி வழங்குவதற்கு ஏதுவாக, சில உண்மைகள் வெளிவர உங்கள் பணியும் காரணமாக இருந்துள்ளது.
சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் மருத்துவமனைக்குச் சென்று உரிய நடவடிக்கை எடுத்த செந்தில் பாலாஜிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுகுறித்து கருத்து எதுவும் சொல்லக் கூடாது. மிக சிறப்பான தலைமை பண்புடன் நடந்து கொண்டு, முதல்வர் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது.
இனிமேல் இதுபோன்ற தவறு நடக்கக் கூடாது. அதற்கு அழுத்தமான சட்டங்கள் அமைய வேண்டும். நான் பேசுவது மனிதம், எதிர்க்கட்சிகள் பேசுவது அரசியல். இப்போது அதற்கு நேரமல்ல, இனி வரும் காலங்களில் பேசிக் கொள்ளலாம். எவ்வளவு பணம் கொடுத்தாலும், போன உயிர் திரும்பாது. பணம் எவ்வளவு கொடுத்தது என்ற போட்டி வேண்டாம்.
மனிதாபிமானம் காட்ட வேண்டிய நேரம். காலம் கடந்து அறிவுரை சொல்ல முடியாது. இனி ஒரு தலைவராக செய்யவேண்டியதை அவர் செய்யவேண்டும். இப்போது யாரையும் சாடும் நேரமில்லை” என்று கமல்ஹாசன் கூறினார்.





