திடீரென வைரலாகும் பாடகன் சத்யனின் வேண்டுகோள்

இயக்குநர் கதிர் இயக்கிய காதலர் தினத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இடம்பெற்ற, ‘ரோஜா.. ரோஜா’ பாடலை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.
படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இந்தப் பாடல் சிறந்த பங்களிப்பைச் செய்திருந்தது. இதனால், அப்போது பல இசை நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் பாடப்பட்டது.
அப்படி, மேடைப் பாடகரான சத்யன் இந்த, ‘ரோஜா ரோஜா’ பாடலை 26 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சியொன்றில் பாடியிருக்கிறார். மிகக் கடினமான பாடல் என்றாலும் அந்த நிகழ்ச்சியில் மிகச்சாதாரணமாக சத்யன் பாடியது இன்றைய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் சத்யன் வைரலாகவுள்ளார். அவர் பாடிய பழைய பாடல்களையும் தேடிச்சென்று கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சத்யன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் மீது அக்கறையுள்ள ரசிகர்களுக்கு நன்றி. உள்ளதை உள்ளபடி சில ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், சில மீடியாக்கள் அவர்களின் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர்.
இது, இத்தனையாண்டு காலம் உழைத்து முன்னேறிய ஒருவனை குழிதோண்டி புதைப்பது மாதிரி… தயவு செய்து இதைச் செய்யாதீர்கள். நல்ல விஷயங்களுக்கு காலம் எடுக்கும். ஆனால், கெட்டவை உடனே பரவும். அதனால், அடிப்படை அறந்துடன் நடந்துகொள்ளுங்கள்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.