உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம் – ஆனால் செலவை ஏற்க மாட்டோம் என அறிவித்த டிரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு கருவிகளான பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த அமைப்புகளுக்கான செலவை அமெரிக்கா ஏற்காது என்றும், அதற்குப் பதிலாக நேட்டோ கூட்டணி நாடுகள் அல்லது ஐரோப்பிய நாடுகள் நிதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஜூலை 2025-இல் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய பிறகு இந்த முடிவை அறிவித்தார்.
டிரம்ப், நேட்டோ மாநாட்டில் பேசியபோது, “நாங்கள் ஆயுதங்களை நேட்டோவுக்கு அனுப்புவோம், நேட்டோ அவற்றை உக்ரைனுக்கு வழங்கும், முழுச் செலவையும் நேட்டோ திருப்பிச் செலுத்தும்,” என்றார்.
இது, அமெரிக்க அரசின் நிதிச்சுமையை குறைக்கும் முயற்சி எனக் கருதப்படுகிறது. முன்னதாக, உக்ரைனுக்கு அமெரிக்க ஆயுத உதவிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், உக்ரைனுக்கு பேட்ரியாட் அமைப்புகள் அவசியமாக உள்ளன. ஒவ்வொரு அமைப்பும் சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்புடையதும், ஒவ்வொரு ஏவுகணையும் 4 மில்லியன் டொலர் செலவாகும்.
ஜெலென்ஸ்கி, 10 அமைப்புகளுக்கு 15 பில்லியன் டொலர்கள் செலவு செய்ய உக்ரைன் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஜெர்மனி, நார்வே உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், இதில் நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.