வாழ்க்கைச் செலவீனங்களை குறைக்க இலவச போக்குவரத்து சேவையை வழங்கும் ஆஸ்திரேலிய நகரங்கள்

அதிகமாக இருக்கும் பொதுப் போக்குவரத்துச் சேவைக் கட்டணங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவ ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம் சென்ற அண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி முதல் உதவிக்கரம் நீட்டியது.
அதன்படி எல்லாப் பேருந்து, ரயில், ‘லைட் ரயில்’ எனப்படும் பேருந்து-ரயில் ஆகியவற்றின் பயணங்களுக்கு 50 காசு கட்டணம் செலுத்தினால் போதும்.
ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் அத்திட்டம் முதலில் ஆறு மாதங்களுக்குச் சோதனையிடப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நிரந்தரமாக்கப்பட்டது.
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரயில் பயணங்கள் 19% அதிகரித்தன, பேருந்துப் பயணங்கள் 16% கூடின, பேருந்து-ரயில் பயணங்கள் 28% அதிகரித்தன, ஃபெரி படகுப் பயணங்கள் 43% அதிகரித்தன என்று பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வப் புள்ளி விவரங்களில் தெரியவந்தது.
ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களும் இதுபோன்ற அணுகுமுறையைப் பின்பற்றி வருகின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் திகதியிலிருந்து 18 வயதுக்குக்கீழ் உள்ள பயணிகள் கட்டணமின்றி பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று விக்டோரியா மாநிலம் மே 18ஆம் திகதி அறிவித்தது.
ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவில் சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து நவம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் இலசமாகப் பேருந்து, பேருந்து-ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. இப்போது அந்நகரில் வெள்ளிக்கிழமைகளில் இலசவப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம், தலைநகர் பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் பிப்ரவரி ஐந்தாம் திகதி வரை எட்டு வாரங்களுக்கு இலவசப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கியது.