காஸாவில் நீடிக்கும் போர் – கோதுமை மாவின் விலையில் உச்சக்கட்ட அதிகரிப்பு

காஸாவில் உணவுக் கையிருப்பு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 600 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் போரால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாகக் கோதுமை மாவின் விலை உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவு 16 முதல் 27 டொலர் விலைக்கு விற்கப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.
இதனால் சிலர் ஒரு மாதத்துக்கும் மேலாகக் கோதுமை மாவு வாங்காமல் இருக்கின்றனர். ஏற்கனவே வாழ்க்கை 2 ஆண்டாக படுமோசமாக உள்ள நிலையில் பொருள்களின் விலை தங்களை இன்னும் வாட்டியெடுப்பதாக காஸா மக்கள் கூறுகின்றனர்.
தினம் தினம் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் தங்களுக்குத் தீர்வு வேண்டும் என்று காஸாவின் வடப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த வாரம் காஸா மனிதாபிமான அமைப்பு 3 வட்டாரங்களில் உணவு விநியோக மையங்களை அமைத்தது.
ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றதால் சிலருக்கு உதவிப் பொருள்கள் கிடைக்கவில்லை. இஸ்ரேலியத் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் GHF உதவித் திட்டத்தில் கலந்துகொள்ள ஐக்கிய நாட்டு நிறுவனமும் இதர உதவிக் குழுக்களும் மறுத்துள்ளன. அந்த அமைப்பு நடத்தும் திட்டம் மனிதாபிமான கொள்கைகளை மீறும் வகையில் இருப்பதாக அவை கூறின.