இந்தியா – ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்க ரோபோ வீரர்களைத் தயாரிக்க தீவிரம்

மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள டிஆர்டிஓ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அமைப்பு ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்க மனித இயந்திர வீரர்களைப் (ரோபோ) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த வீரர்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் பேசியபோது, “இந்திய ராணுவத்துக்காக மனிதர்களைப் போன்று கை, கால்களுடன் கூடிய மனித இயந்திர வீரர்களைத் தயார் செய்திருக்கிறோம். அவற்றின் உடல் பகுதியில் இலகுரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
“குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும் போர்க்களத்தில் முன்னேறிச் செல்வது, கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்வது, ஆபத்தான ரசாயனங்களைக் கையாளுவது, ஆயுதங்களை இழுத்து வருவது உள்ளிட்ட கடினமான பணிகளை மனித இயந்திர வீரர்கள் மூலம் செய்யத் திட்டமிட்டு உள்ளோம்,” என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து, டிஆர்டிஓ அமைப்பின் பொறியியல் பிரிவுத் தலைவர் டலோலி கூறுகையில், “போர்க்களத்திலும் ராணுவ நடவடிக்கைகளின்போதும் வீரர்களின் உயிரிழப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகி விடுகிறது.
“இந்த உயிரிழப்பைத் தடுக்க மனித இயந்திர வீரர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மனிதர்களைப் போன்ற ரோபோ வீரர்களைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.
“கடந்த 4 ஆண்டுகளாக மாதிரி மனித இயந்திர வீரர்களைத் தயார் செய்திருக்கிறோம். இவை கடினமான மலைப்பகுதிகளிலும் எந்தப் பிரச்சினையுமின்றி எளிதாக ஏறிச்செல்லும்.
“நாம் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்றுச் செயல்படும் வகையில் மனித இயந்திரக் கருவிகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.