இலங்கையில் விரைவில் மின்சார கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

இந்த வருடத்திற்கான 2வது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் ஏற்பட வேண்டும் என்றால், அதற்கான யோசனைகள் மே மாதத்தில் ஆணையத்திற்கு கிடைக்க வேண்டும் என ஆணையத்தின் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பெற்ற பிறகு, ஆணையம் 3 முதல் 6 வாரங்களுக்குள் யோசளைகளை ஆய்வு செய்து அதன் முடிவை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில், தொடர்புடைய திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளும் கேட்கப்படும்.
சர்வதேச நாணய நிதியம் மின்சாரக் கட்டணங்களை திருத்துமாறு கோரியுள்ளது. அதற்கமைய, எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் பொருத்தமான யோசனை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் மின்சார கட்டண திருத்தம் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.
அப்போது பொதுப் பயன்பாட்டு ஆணையம் மின்சார கட்டணங்களை 20 சதவீதம் குறைக்க முடிவு செய்தது.