அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக உக்ரைனில் பிரான்சும் நட்பு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளதாக கருத்து வெளியிட்ட மக்ரோன்

உக்ரேன் விவகாரத்தில் பிரான்சும் அதன் நட்பு நாடுகளும் ஒருமித்த கருத்துகளைக் கொண்டிருப்பதாக பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் புதன்கிழமை (பிப்ரவரி 19) தெரிவித்தார்.
உக்ரேன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரும் உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்பு உக்ரேனின் உரிமைகள், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அதிபர் மெக்ரோன் அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
“உக்ரேனில் அமைதி திரும்ப வேண்டும். அது நீடிக்க வேண்டும். இதுவே பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நிலைப்பாடு,” என்று அதிபர் மெக்ரோன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.கனடா உட்பட 19 நாடுகளின் தலைவர்களுடன் காணொளி வாயிலாகக் கலந்துரையாடிவிட்டு இக்கருத்தை அதிபர் மெக்ரோன் தெரிவித்தார்.
உக்ரேனுக்கு எதிராக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ரஷ்யா போரிட்டு வருகிறது.இந்நிலையில், ரஷ்யாவுடன் அரசதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தது ஐரோப்பிய ஒன்றியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான மிரட்டலை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அதிபர் மெக்ரோன், அதுகுறித்து நட்பு நாடுகளுடனான கலந்துரையாடலின்போது பேசினார்.
உக்ரேனில் அமைதி திரும்ப வேண்டும் என்றபோதிலும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் தற்காப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அதிபர் மெக்ரோன் கூறினார்.
அதிபர் மெக்ரோன், அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்பை வாஷிங்டனில் சந்தித்துப் பேச இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.இந்நிலையில், அமெரிக்கத் தூதரான கீத் கெல்லோக்கைச் சந்திக்க இருப்பதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வகையில் ஒன்றிணைந்து செயல்படத் தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.