மார்ச் 26 தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சீனர்களின் குடும்பங்களுக்குப் பாகிஸ்தான் இழப்பீடு
![](https://iftamil.com/wp-content/uploads/2024/05/suicide-attack.jpg)
பாகிஸ்தானில் கடந்த மார்ச் 26ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இறந்த சீனர் ஐவருக்கும் இழப்பீடு வழங்க பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள கைபர் பக்துன்குவா மாநிலத்தில் நீர்மின்னாலை அமைக்கப்பட்டு வரும் இடத்திற்குச் சென்றபோது, வெடிகுண்டு நிரம்பிய காரை அவர்களது வாகனத்தின்மீது மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரவையின் பொருளாதார ஒத்துழைப்புக் குழு அந்த ஐவரின் குடும்பத்தாருக்கும் 2.58 மில்லியன் அமெரிக்க டொலர் (S$3.50 மில்லியன்) இழப்பீடு வழங்குவது என வியாழக்கிழமையன்று (மே 23) முடிவெடுத்தது.
அதன்படி, நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும் 518,000 அமெரிக்க டொலர் வழங்கப்படும் என்று ‘டான்’ நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.பெய்ஜிங்கிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் வழியாக அத்தொகை உடனடியாக வழங்கப்படும் என்று நிதியமைச்சு அதிகாரி ஒருவரைச் சுட்டி, அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் அடுத்த மாதம் சீனா செல்லவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.