டிரம்பிற்கு 712 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் அபாயம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 நெருக்கமானவர்களுக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் மாதம் 25ம் திகதிக்குள் தானாக முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் ஃபானி வில்லிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் 24 அல்லது 25 அன்று ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைவார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஜோர்ஜியாவில் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
அவருடன் 18 கூட்டாளிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளில் போலி ஆவணங்களைச் சதி செய்தல், பொய்யான ஆவணங்களைத் தாக்கல் செய்தல் ஆகியவை அடங்கும்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நான்காவது குற்றச்சாட்டு வழக்கு இதுவாகும்.
அண்மையில், நியூயார்க் போஸ்ட்டில் வெளியான செய்திப்படி, டொனால்ட் டிரம்ப் மீது 91 வழக்குகள் மற்றும் 712 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க கூடும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.