உலகம் செய்தி

இறுதி கட்டத்தில் அமைதி ஒப்பந்தம்: உறுதிப்படுத்தியது ஈரான்!

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதில் ஹார்முஸ் நீரிணை பகுதியை மீண்டும் திறப்பதும் அடங்கும் என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Seyed Abbas Araghchi தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை நீக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், ஈரானுக்கான பொருளாதார நன்மைகள், தெஹ்ரான் தனது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது.

இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்துக்கான முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையையும் முற்றிலுமாக மூடியது.

கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட போதிலும், அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.

இந்த வாரத்தில் கூட இரு தரப்பிலும் பரஸ்பர தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், பேச்சுவார்த்தையாளர்கள் “மிகச்சிறந்த ஒரு உடன்பாட்டை” எட்டியுள்ளதால், ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை தான் ரத்து செய்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை அன்று, ஈரானிய ஊடகங்கள் 14 அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை வெளியிட்டன.

ஆனால், இந்த விவரங்களுக்கும் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது உண்மைக்கு புறம்பானது என்றும் டிரம்ப் மறுத்தார்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தத்திற்கு நடுவராகச் செயல்பட்டு உதவிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது இறுதி வடிவம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி