பாஜகவில் இருந்து விலகுகிறார் அண்ணாமலை?
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றமை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அண்ணாமலை, அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார்.
தமிழக பாஜக தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், தமிழகம் முழுவதும் பாஜக வளர்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
இதனால், இளைஞர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு அதிகரித்தது. தமிழக அரசியலில் அண்ணாமலையும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
இதற்கிடையே, தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு, தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
மாநில தலைவர் பதவி இல்லாததால், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, கட்சியின் எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.
பாஜக தலைமையை எதிர்த்து முதல்முறையாக கருத்து தெரிவித்ததன் மூலமாக, சுதந்திரமாக செயல்பட பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அண்ணாமலை நேற்று மாலை 5 மணிக்கு அவசர பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அவர் எங்கு சென்றாலும் உடன் வரும் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள பாதுகாப்பு வீரர்களுடன் கூடிய வாகனம் அவருடன் வரவில்லை. அதேபோல், அண்ணாமலையின் காரில் பாஜக கொடியும் இல்லை.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாட்டை அண்ணாமலை தெரிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம், ‘பாஜகவில் இருந்து விலகுகிறீர்களா? புதிய கட்சி தொடங்கு கிறீர்களா?’ என செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அனைத்து கேள்விகளுக்கும் 2 நாளில் பதில் அளிக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.




