எவரெஸ்ட் சிகரத்தின் மரண மண்டலத்தை அடைய முயன்ற 05 பேர் உயிரிழப்பு!!
உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடையும் முயற்சியில் இரண்டு இந்தியர்கள் உள்பட 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
8,849 மீட்டர் உயரமுள்ள இந்த மலையில், 8000 மீட்டருக்கு மேல் உள்ள பகுதி ‘மரண மண்டலம்’ (Death Zone) என்று அழைக்கப்படுகிறது.
இந்த மண்டலத்தில், மனித உடல் படிப்படியாகச் செயலிழக்கத் தொடங்குகிறது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மண்டலத்தில் மட்டும் 340-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் இந்த வருடத்தில் 05 பேர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மரண மண்டலம் ‘ (Death Zone) எப்படி இருக்கும்?
மரண மண்டலம் 8,000 மீட்டர் (26,247 அடி) உயரத்தில் தொடங்குகிறது.
இந்த உயரத்தில், கடல் மட்டத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே காற்றில் இருக்கும். மனித உடலால் இந்த நிலைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியாது.
அனுபவம் வாய்ந்த மலையேறுபவர்கள் கூட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து விடுகிறார்கள். இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, மேலும் மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது, இது முடிவெடுக்கும் திறனையும் சமநிலையையும் பாதிக்கிறது.
மலையேறுபவர்கள் இதை “மெதுவான சுவாசம் மற்றும் மெதுவான இயக்கம்” கொண்ட ஒரு திகிலூட்டும் அனுபவம் என்று அழைக்கிறார்கள்.
எவரெஸ்டில் மரணத்திற்கான முக்கிய காரணம் ஹைபோக்ஸியா ஆகும், இது உடலின் திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காத ஒரு நிலையாகும்.
செயற்கை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் ஒருவரை எவரெஸ்ட் உச்சிக்குக் கொண்டு சென்றால், அவர் 4 நிமிடங்களுக்குள் சுயநினைவை இழந்து, 6 நிமிடங்களுக்குள் இறந்துவிடுவார். இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை உடலில் உள்ள பல உறுப்புகளைச் சேதப்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.




