போர்நிறுத்த மீறல் – காசா தாக்குதல்களுக்கு பலஸ்தீன் கடும் கண்டனம்
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களை பலஸ்தீன அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இத்தாக்குதல்கள் “அழித்தொழிப்பு, படுகொலை மற்றும் நாசவேலைப் போர்” என அவர்கள் விவரித்துள்ளனர். மேலும், இது சர்வதேச சட்டங்களையும், போர்நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளையும் வெளிப்படையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்த நாடுகள் மற்றும் உத்தரவாத நாடுகள், ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து, பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, காசா பகுதியின் கட்டுப்பாட்டை 70 சதவீதம் வரை விரிவுபடுத்தும் திட்டம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்த கருத்துகளையும் பலஸ்தீனம் கண்டித்துள்ளது. அந்தக் கருத்து, “போர்நிறுத்தத்தின் அடித்தளங்களை மீறும் செயல்” என்றும், “பலஸ்தீன அரசை உருவாக்கும் சர்வதேச முயற்சிகளை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் நடவடிக்கை” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், போர்நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும் தொடர்ந்து நடந்த தாக்குதல்களால் காசாவில் 1,000-க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூடப்பட்ட எல்லைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக காசாவில் மனிதாபிமான நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.





