“கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு”: சட்டமூலத்தின் பின்னணி என்ன?
“அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. எனவேதான் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளில் இணைவதை தடுக்கும் நோக்கில் கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிபோகும் சட்டமூலம் அவசரமாக கொண்டுவரப்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கூறியவை வருமாறு ,
“அரசாங்கத்தின் தற்போதைய பயணம் தவறு என்பது திசைக்காட்டியிலுள்ள கல்வி பின்புலம் உடைய எம்.பிக்களுக்கு தெளிவாக புரிகின்றது.
எனவே, இவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிடக்கூடும், ஏனையக் கட்சிகளுக்கு செல்லக்கூடும்.
ஆகவேதான் அவர்களை பலவந்தமாக அரசாங்க பக்கம் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், கட்சி தாவினால் எம்.பி.பதவியை பறிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.” என்றார்.





