விரைவில் மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!
“மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு ,
“தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அதற்கான பணம் ஏற்கனவே வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற் தேர்தல் சட்ட விதிகளில் உள்ள முரண்பாடுகளும் சிக்கல்களுமே பிரதான காரணமாகும்.
இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தகுந்த தீர்வு காண்பதற்காகத் தற்போது விசேட நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றது.
இது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றக் குழுவின் மூலம் தேவையான சட்டக் கட்டமைப்பு சீர்செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 8 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல் என்பவற்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.” – என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.





