புலம்பெயர்ந்தோர் விவகாரம் – கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தலிபான்களுக்கு அழைப்பு!
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பும் செயன்முறை குறித்து விவாதிப்பதற்காக , தலிபான் அதிகாரிகள் பிரஸ்ஸல்ஸுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கைக்காக ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
அந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் தொழில்நுட்பக் கூட்டங்களை நடத்துவதற்காக ஸ்வீடன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கான திதகிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கஸ் லேமர்ட் (Markus Lammert), ஷெங்கன் பகுதியில் தங்குவதற்குத் தகுதியற்றவர்கள் எனக் கருதப்படும் புலம்பெயர்ந்தோரை ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பும் நோக்கில், பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக பிரஸ்ஸல்ஸில் தொழில்நுட்ப மட்டத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று விசாரிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றிய குடிவரவு அதிகாரிகள் மற்றும் ஸ்வீடன் நீதி அமைச்சகம், ஆப்கானிஸ்தானில் உள்ள நடைமுறை அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை ஆகஸ்ட் 2021-ல் காபூலை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றிய பிறகு, இந்த இஸ்லாமியப் போராளிக் குழுவின் அதிகாரிகளை ஐரோப்பிய ஒன்றியம் உபசரிப்பது இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தலிபான்கள் முயற்சி செய்கின்றபோதிலும் ரஷ்யா மட்டுமே அவர்களின் நிர்வாகத்தை அங்கீகரித்துள்ளது.




