சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பிய உரை குறித்து சுமந்திரன் விளக்கம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை முழுமையாகப் பேணி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் என்றும், அரசு முன்னெடுக்கும் சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, தவறுகளைச் சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்காது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத் திறப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை குறித்துச் சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து, அவர் வெளியிட்டுள்ள விளக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆயுதக் கலாசாரப் பின்னணியிலிருந்து (ஜே.வி.பி. அரசியல்) வந்தவராவார்.
அதேபோன்று எமது தமிழ் மக்களும் தமது விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களாவர். ஆகையினால், நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி கூறிய கருத்தை நாமும் ஏற்றுக்கொள்வது நல்லதொரு விடயமாகும்.
ஆனால், அவ்வாறானதொரு யுத்த சூழ்நிலை நாட்டில் மீண்டும் உருவாகாமல் இருக்க வேண்டுமாயின், தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்தில் விரைவாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை எனது உரையின் மூலம் நான் ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக வலியுறுத்தினேன்.” – என்று சுமந்திரன்
குறிப்பிட்டுள்ளார்.





