“அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்” – ஜனாதிபதி
“டித்வா” சூறாவளி நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபா நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இவ்வருட இறுதிக்குள் அந்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மாத்தளை வீர கெப்பெட்டிபொல மண்டபத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,
அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் புதிய கலாசாரத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்துள்ளது.

எனினும், அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் ஒரு நாட்டை உருவாக்குவதை பெரும் அச்சுறுத்தலாகச் சித்தரிக்கச் சிலர் முயற்சிக்கின்றனர்.
ஒரு நாகரீகமான நாட்டை உருவாக்குவதற்காக அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் சமூகத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.
சட்டமானது அரச அதிகாரிகள் தமது கடமைகளைச் சரியாகச் செய்வதற்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சட்டக் கட்டமைப்பிற்குள் நின்றுகொண்டு அரசாங்கத்தின் நிதியை மிகவும் திட்டமிட்ட முறையிலும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முழு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்குதல், வீடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக ஆராய்ந்தார்.

காணி உரிமை இல்லாமை, அதிக அபாயமுள்ள பிரதேசங்களில் அமைந்திருத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குச் சொந்தமான நிலங்கள் போன்ற காரணங்களால் எழுந்துள்ள சிக்கல்களுக்கு வழங்கக்கூடிய மாற்றுத் தீர்வுகள் குறித்தும் இங்கு விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக நிலவும் அளவுகோள்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.





