நேட்டோ நாட்டின் மீது ஆளில்லா விமான தாக்குதல்!
நேட்டோ உறுப்பு நாடான லாட்வியாவிற்குள் இன்று இரண்டு ஆளில்லா விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த ஆளில்லா விமானங்கள் “ரஷ்யாவில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து உக்ரைனால் ஏவப்பட்டிருக்கலாம்” என்று லாட்வியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரிஸ் ஸ்ப்ருட்ஸ் ( Andris Spruds ) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பன்னாட்டு நேட்டோ பால்டிக் வான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இராணுவ விமானங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்கள்) தொலைவில் உள்ள ரெசெக்னேவில் (Rezekne) உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் இந்த விமானங்கள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.





