ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நற்செய்தி : இலவச விசா அணுகல்!
பிரித்தானியா, ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்க இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தொடர்புடைய முன்மொழிவு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெலாரஸ், பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பஹ்ரைன், ஈரான், இஸ்ரேல், கஜகஸ்தான், குவைத், நேபாளம், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற 40 நாடுகள் இலவச விசா சலுகையை பெறலாம்.
முன்னர் சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இலவச விசா வசதி வழங்கப்பட்டு வந்த நிலையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, முப்பது நாட்களுக்கு இலவசப் பயண விசா வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த நாடுகளின் பார்வையாளர்கள் மற்ற அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், விசா கட்டணம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக அவர்கள் மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இலவச விசா வசதியால் அரசாங்கத்திற்கு சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இருப்பினும், இந்த இலவச விசா வசதி மூலம் கூடுதலாக 247,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று மதிப்பிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





